Friday, 13 December 2013

பத்து மாதம்
சுமக்கவில்லை...
பத்தியம் எதுவும்
இருந்ததில்லை...
பாசத்தை
வெளிப்படையாய்
காட்டியதில்லை...
நிலாச்சோறு
ஊட்டியதில்லை...

பண்டிகை நாட்களில்
எங்களுக்கான செலவு
ஆயிரங்களில் இருக்க..
உனக்கான செலவு
சில நூறுகளில்
முடிந்துவிடும்...

ஒருக்களித்து
நான் உறங்குகையில்
"எங்க அம்மா மாதிரியே இருக்கா"
பலமுறை நீ கூறியது
இன்னும் ஒலிக்கிறது
என் காதுகளில்...

அம்மா நம்ம‌ அப்பா சூப்பர்ல..
அப்பா ஏன் தான் இப்படியோ..
எப்டிமா அப்பாவ சமாளிக்கற?..
இப்பாடியான எல்லாக் கேள்விகளுக்கும்
அம்மா சிரிப்பு ஒன்றையே பதிலாய்
தருகையில் தெரிகிறது
அவளிடத்திலான உன் புரிதல்...

50ஐ தொடும் வயதிலும்
அழைத்தகுரல் ஓயும்முன்
அருகில் ஓடி நிற்கையில் தெரிகிற‌து
உன் அம்மை அப்ப‌னிட‌ம் நீ
வைத்திருக்கும் பாச‌மும் ப‌ணிவும்...

நீ கலங்கி நின்று
நான் கண்டதில்லை..
ஏனோ அழுகின்ற அம்மாவின்
முகம் போல அவ்வளவு
எளிதில் கானக்கிடைப்பதில்லை
அழுகின்ற அப்பாவின் முகம்...

நேற்று
என் அப்பாவுக்கு
எல்லாம் தெரியும்
எனும் வயது
இன்று
என் அப்பாவுக்கும்
எல்லாம் தெரியும்
எனும் வயது
உன் பாசம் மாறவில்லை...

நாளை
என் அப்பாவுக்கு
என்ன தெரியும்
எனும் வயதும் வரும்
அப்போதும்
உன் பாசம் மாறப்போவதில்லை
என்றும் எனக்கு தெரியும்...

love you appa...

No comments:

Post a Comment